சிவில் சம்மந்தப்பட்ட மனுக்களை காவல்துறையினர் விசாரிக்க தடை ஏதுமில்லை. ஆனால் அந்த விசாரணை சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.



சிவில் சம்மந்தப்பட்ட மனுக்களை பெறும் காவல் நிலைய பொறுப்பு அலுவலர், அதனை ஒரு மனுவாக கருதி, சமுதாய சேவைப் பதிவேட்டில் அதனை பதிவு செய்து கொண்டு புகார்தாரருக்கு ஒப்புகை சீட்டினை வழங்க வேண்டும். மனுவை பெறும் காவல் அலுவலர், புகார் பெற்ற விபரத்தை உடனடியாக மூத்த அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து, மேலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு காவல்துறையினருக்கு சட்டப்படி அதிகாரம் உள்ளது.

சிவில் சம்மந்தப்பட்ட மனுக்களை காவல்துறையினர் விசாரிக்க அதிகாரம் இல்லை என்றாலும், அவர் அதற்கான அதிகாரத்தை குவிமுச சட்டப் பிரிவு 149 ன் மூலம், அதாவது ஒரு காவல் அலுவலர், பிடியாணை வேண்டாக் குற்றத்தை தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின் மூலம் அத்தகைய அதிகாரத்தை பெறுகிறார். குவிமுச சட்டப் பிரிவு 149 ஆனது ஒவ்வொரு காவல் அலுவலரும் ஏதாவதொரு பிடியாணை வேண்டாக் குற்றம் புரியப்படுவதை தடுக்கும் நோக்கத்திற்காக அதில் குறுக்கிடலாம் என்று கூறுகிறது. ஆனால் சிவில் மனுக்களை பயன்படுத்தி கட்டப் பஞ்சாயத்து செய்வது சட்ட விரோதமானது.

ஏற்கனவே நீதிபதி இரகுபதி அவர்கள் CRL. OP. NO - 5426/2009 என்ற வழக்கில், காவல்துறையினர் கட்டப் பஞ்சாயத்து செய்வது தவறு என்றும், அது கடுமையாக தண்டிக்க பட வேண்டிய குற்றம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் சிவில் சம்மந்தப்பட்ட மனுக்களை விசாரிக்க வேண்டும் என்றால் எதிர் தரப்புக்கு குவிமுச சட்டப் பிரிவு 160 ன் கீழ் அழைப்பாணை அனுப்பி விசாரிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

W. P. No - 6453/2010 என்ற வழக்கில் நீதிபதி திரு. பால் வசந்தகுமார் அவர்கள் போலீசார் சிவில் வழக்குகளில் தலையிட்டு சட்ட விரோதமாக கட்டப் பஞ்சாயத்து செய்வதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

2004 - 1 - CTC - 130 என்ற வழக்கில் காவல்துறையினர் சிவில் சம்மந்தப்பட்ட மனுக்களை காவல்துறையினர் ஒரு புகார் மனுவாக கருதி விசாரிக்கலாம் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

ஆக சிவில் சம்மந்தப்பட்ட மனுக்களை காவல்துறையினர் விசாரிக்க தடை ஏதுமில்லை. ஆனால் அந்த விசாரணை சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

Comments